பன்றி இறைச்சி உண்ணாதிருக்க அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன?
10. கேள்வி : பன்றி இறைச்சி ஹராம் என்பது இறைவேதத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிமாகிய நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் மாற்றுமதத்தவராகிய என் நண்பருக்கு தெளிவாக்க அறிவியல்பூர்வமான விளக்கத்தை தரவும். (என்.எம்.நாசர் யாகூமெயில் மூலமாக)
பன்றி இறைச்சி ஹராம் என அல்குர்ஆனில் கட்டளையாக குறிப்பிடப்பட்டிருப்பதனால் முஸ்லிம்கள் அதனை விலக்கிக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத பலர் அதனை ருசியான உணவாக உட்கொள்கின்றனர்.
முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, இஸ்லாமிய மார்க்கமானது மனிதனை புனிதனாக்க இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும். எனவே அதில் ஆகுமாக்கப்பட்டவைகளும் (ஹலால்), தடுக்கப்பட்டவைகளும் (ஹராம்) மனிதனது நலனுக்காகவே வழங்கப்பட்டவையாகும். அவற்றிற்கான காரணங்கள் (Logic & Reasons) சிலவேளை வெளிப்படலாம் அல்லது நமக்கு வெளிப்படுத்தப்படாமலே கூட இருக்கலாம். எவ்வாறாயினும் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய யாவருக்கும் (அவர் எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்) இக்கட்டளைகள் நன்மையே பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குறிப்பாக பன்றியின் இறைச்சி உண்ணத் தகுந்ததல்ல என்பதற்கு இன்று அனேக ஆதாரங்கள் அறிவியலாளர்களால் எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றுள் பிரதானமானது, பன்றியின் இறைச்சியில் உள்ள நாடாப் புழுக்கள். இந்நாடாப் புழுக்கள் அதிஉச்ச கொதிநிலையில் கூட மரணிப்பதில்லை. இவை பன்றியின் இறைச்சியோடு இரண்டறக் கலந்து உட்கொள்ளப்படுவதால் எளிதில் மனிதனின் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. பின்னர் மனிதனின் தலைமைச் செயலகமான மூலையை நோக்கி முன்னேறிச் செல்கின்றன, அல்லது உடலின் பிற முக்கிய உறுப்புக்களில் (Internal Organs) உள் நுழைந்து விடுகின்றன. பின்னர் அவற்றை செயலிழக்கச் செய்கின்றன.
பிற நோய்களைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்படுவது போல், இந்நோய் குறித்து பரவலாக பிரச்சாரம் நடத்தப்படவில்லை. எனவே இதன் அபாயம் அனேகருக்கு விளங்க வில்லை.
இந்நோயின் இன்றைய சாட்சி இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ் ஆவார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்நோயை குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
மேலதிகமான விபரங்களைப் பெற டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களின் Islamic Dietry Laws எனும் வீடியோவைப் பார்வையிடவும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்