ஜும்ஆ உரை நிகழ்த்தும் போது சுன்னத் தொழலாமா?
38 கேள்வி : வெள்ளிக்கிழமை தாமதமாக பள்ளிவாசலுக்கு வரநேர்ந்தால் ஜும்ஆ குத்பா உரை நிகழும் போது சுன்னத் தொழுகை தொழலாமா? அல்லது குத்பா உரைக்கு முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா? விளக்கம் தாருங்கள். (ஹமீது யாகூ டாட் காம் மெயில் மூலமாக)
முதலில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பை அறிந்து விட்டு உங்கள் கேள்விக்கு வருவோம்.
ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.
‘பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 881)
ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
‘ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது என்பதை இப்போது நாம் பார்ப்போம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நூல்: புஹாரி 930)
இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.
தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.
தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.
அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்.
இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?’ என்று கேட்க, அவர் ‘இல்லை’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக’ என்றார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)
‘நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?’ என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்.
இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.
இன்னும் சில ஐயங்களுக்கு விடை காண்போம்.
1. லுஹர் தொழுகையின் நேரம் தான் ஜும்ஆவின் நேரமா?
ஜும்ஆவின் நேரம் லுஹரின் நேரத்திற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. லுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரம் ஆகும். அதற்கான ஆதாரம்.
‘நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுவார்கள். அதன் பின்னர் நாங்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று அதற்கு ஓய்வளிப்போம்’. (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1870, அஹ்மத், நஸயீ 1392)
2. ஜும்ஆவின் முன் சுன்னத் எப்போது?
மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. அதற்கான ஆதாரம்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஉ (ரலி), நூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)
மறுமொழியொன்றை இடுங்கள்