கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா?
11 கேள்வி : கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா? (முபாரக் ஹெச்.அலி யாகூமெயில் மூலமாக)
ரமளான் நோன்பைப் பொறுத்த வரை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் நோயாளிகள் போன்றே கருதப்படுவர். அவர்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்குமென்றிருந்தால் அச்சமயத்தில் நோன்பு நோற்காமல் விட்டு விட்டு பின்னர் அதனை களாச் செய்ய வேண்டும்.
சில அறிஞர்கள், ‘கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், நோன்பை விட்டு விட்டு அதற்கு பரிகாரமாக ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை என்ற வீதத்தில் உணவு வழங்கினால் போதுமானது’ என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கருத்து பலவீனமானதாகும்.
நோயாளி மற்றும் பயணியைப் போல் நோன்பை விட்டு விட்டு பின்னர் களா செய்து கொள்ள வேண்டுமென்பதே சரியான கருத்தாகும்.
‘உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டு (நோன்பு நோற்றுக்) கொள்ளலாம்….’ (அல்குர்ஆன் அல்பகரா 2:184)
‘நிச்சயமாக அல்லாஹ் பயணிக்கு நோன்பை விடுவதற்கும், தொழுகையை (அரைவாசியாக) குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்துள்ளான். கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை அளித்துள்ளான்’ என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்கள்: அபூதாவூத், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா)
(இது அஷ்ஷெய்க் இப்னு பாஸ் அவர்கள் வழங்கிய ஃபத்வா)
மறுமொழியொன்றை இடுங்கள்